Monday, July 6, 2009

பெண்ணியப் புயல்கள்



எது காட்டப்பட முடியுமோ அது சொல்லப்பட முடியாது, சொல்லப்படக் கூடியவையும் சில செயற்பாட்டுக் கட்டுக்குள் சிக்குண்டு போய்விடும். மனித உணர்வு இயல்பூக்கங்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது. ஆனால் அவை தனக்கே என வரும்போதுதான் சாத்தியப்படுகிறது, அடுத்தவர் எனும் அடைமொழிக்குள் அடிபட்டு விடுகிறது.

பெண்ணியம் பேசும் ஆண்களும் கூட அதனை நடைமுறைப்படுத்துவதில் தயக்கங்காட்டுவது முந்தைய என் சொற்களுக்கு வலுக்கூட்டுகிறது. இருக்க, சில பெண்களுங்கூட பெண்ணியக் கருத்துக்களுக்கு முரணானவற்றை முன்வைப்பது வருந்தற்குரியது. இங்கு பெண்ணியம் என்ற வார்த்தைக்கு ஒவ்வாத அர்த்தங்கொண்டு அவர்கள் அங்ஙனம் தம் கருத்துக்களை வெளியிடுவதைக்கூட அவதானிக்க முடிகிறது.
பெண்ணியவாதிகள் முன்வைக்கும் கட்டற்ற சுதந்திரத்தை மட்டுப்படுத்த முயல்வோரை பழமைவாதிகளா பண்பாடு பேண்வோரா என்பதை பட்டிமன்ற வாதங்கள் முடிவுக்குக் கொண்டுவரட்டும். பழைய இலக்கியங்கள் எடுத்தியம்பும் கற்பு இன்று அழுத்தப்பட முடியாது, அவ்வாறு நிகழுமாயின் விதவை மறுமணம் கூட ஒழுக்கக்கேடாகிவிடும். ஓரினச் சேர்க்கைக்கு இந்தியா ஒப்புதல் அழித்துள்ளமையினை சில பிரபலங்கள் வரவேற்றுள்ள நிலையில் இவை போன்ற உறவுகள் சந்தர்ப்ப சூழல்கள் ஏற்படுத்தும் மனப் பிறழ்வுகளின் வெளிப்பாடுகள் என்ற வாதப்பிரதிவாதங்கள் இன்னும் ஓய்வுக்கு வராதபோது இது குறித்துக் கருத்து வெளியிடுவது அறிவீனம்.

பெண்ணியம் குறித்து என்னோடு சொற்போர் தொடுத்த சிலருக்கு விளக்கங்கொடுக்குமுகமாகவே இதனை எழுதுகிறேன். அண்மையில் நான் வாசித்த மு.பொன்னம்பலம் அவர்கள் எழுதிய “விசாரம்” நூல் பெண்ணியம் குறித்து விசாலப்படுத்தி நிற்கின்றது.

உலக வளர்ச்சிக்கான உழைப்பில் அரைவாசிக்கும் மேலாகப் பங்களிப்பு நல்கும் பெண்கள் இன்றுள்ள ஆணாதிக்க முனைப்புக்கொண்ட அரசியல், சமூக, பொருளாதார நோக்கால் பின்தள்ளப்படும்போது அதற்கெதிராகத் திரள்வதில் தவறேதும் இருப்பதாய்த் தோன்றவில்லை. இருப்பினும் ஆண்களின் போராட்ட ஆற்றலினை பெண்களிடம் எதிர்பார்க்க முடியுமா என்ற ஐயப்பாடு தோன்றி நிற்க உளவியல் மற்றும் அறிவியல் ரீதியாக மு.பொன்னம்பலம் எடுத்துரைத்த கருத்துக்களை நோக்குவோமாயின் உயிரியல் ரீதியாக ஆண் என்பவன் அடக்கியாளும் வன்முறையுடையவனாகவோ, பெண் என்பவள் அடங்கிப்போகும் மென்தன்மை உடையவளாகவோ பிறப்பதில்லை. இத்தகைய குணங்களை சமூகமே அவர்களிடம் திணிக்கிறது. சமூகச் சூழலின் உருவாக்கமே ஆண்மைக் குணங்களும் பெண்மைக் குணங்களும்.

பெண் என்பவள் ஆண் ஒருவனின் சொத்தாகவே, போகப்பொருளாகவே கொள்ளப்படுகிறாள். அந்த சொத்தென்ற ஒன்றிலிருந்தே “கற்பு” போன்ற பல ஆணாதிக்க கோட்பாடுகள் பெண்கள் மேல் திணிக்கப்படுகின்றன. இவற்றின் மூலமே பெண்ணின் அடிமை சாசனம் எழுதப்பட ஏதுவாகிறது. ஆனால் இரு சாராருக்குமான கட்டற்ற சுதந்திரத்தையே பெண்ணியக் கோட்பாடுகள் வலியுறுத்தி நிற்கின்றன. உலகம் தழுவிய பெண்ணிய ஒழுக்கக் கோட்பாட்டின்படி கட்டற்ற விடுதலையும் அதன் வழி வரும் கட்டற்ற அன்பும் சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் என்பது ஒரு சாராருடைய கருத்து. ஆனால் இவர்களின் எதிர்ப்பு காலாகாலமாக வந்த சமய, ஆசார வழிவந்த ஒழுக்கத்தின் அடிப்படையில் வந்தது. இதற்கும் பெண்ணிய விடுதலைக்கும் தொடர்பு இருப்பதாகத் தோன்றினாலும் இரண்டும் முரணானவையே.
ஆண்-பெண் இருபாலாரையும் ஒருவர் மற்றவரின் சொத்தாக, போகப்பொருளாக நினைக்க வைப்பதும், அதனால் ஏற்படும் நோக்கால் ஒருவர் மற்றவர் விவகாரங்களில் தலையிட வைப்பதும் இக்கட்டற்ற சுதந்திரத்தால் இல்லாமற் போகிறது. எஞ்சியிருப்பது அன்பு மாத்திரமே. கட்டற்ற சுதந்திரம் என்பது கட்டற்ற அன்பாக மாறலாம்.

மனித நாகரிகத்தின் ஆரம்ப காலத்தில் அதே கட்டற்ற சுதந்திரம் நிலவிய காலத்தில் தாய்-தனயன் உடலுறவு, தங்கை-சகோதரன் உடலுறவு என்ற கட்டற்ற போக்கு இருந்தது. இப்போதும் அதன் எச்ச சொச்சங்கள் இருந்து வருகின்றன. ஆனால் இவை மனித நாகரிகம் குழந்தைப் பருவகாலத்தில் ஏற்பட்ட ஒழுக்க முறைகள், இப்போது நாம் யார் என எம்மை நாம் பிரக்ஞைபூர்வமாக உணர்ந்து வைத்திருக்கும் காலத்தில் பழைய நிலைக்கு திரும்பிப் போதல் ஏற்படாது, ஒரு சில புறநடைகளைத் தவிர!

கோதண்டம் இராமனுக்கு
கோடாரி பரசுராமனுக்கு
சக்கரம் கிருஷ்ணனுக்கு
கதாயுதம் வீமனுக்கு
காண்டீபம் அர்ச்சுனனுக்கு
காவியங்களெல்லாம் கண்களை மூடிக்கொண்டு
ஆண்களை ஆயுதங்களுடனேயே
அவதரிக்கச் செய்தன!

பஞ்சப்புலவர் பாரதியின் காலம்வரை
பழைய சாதமே எங்களுக்கு பரிமாறப்பட்டது
நேற்றுவரை பெண்ணியப் புயல்கள்
அடுப்புக்குள்ளேயே புகையூதிக் கிடந்தன
வேலித் துவாரத்தினூடாகத்தான்
வெளியுலகைப் பார்த்தன! -( புதுவை இரத்தினதுரை)

No comments:

Post a Comment