Thursday, June 25, 2009

அற்ப சகவாசம்


என் குறுகிய கால கால் நூற்றாண்டு வாழ்க்கை அனுபவத்தில் நல்ல நண்பர்களைப் பெற்று அவர்களுடன் தொடர்ந்தும் நட்புக்கொள்ள முடியாத அளவு காலத்தின் கட்டாயத்தால் பிரிந்தும் இருக்கிறேன், சில சுயநலமிகளை இனங்கண்டும் இருக்கின்றேன். சிலர் அவர்கள் குறித்த பசுமையான நினைவுகளை என்னுள் படரவிட்டுச் சென்றுள்ளனர். அவர்களை நினைக்கும் தருணங்களிலெல்லாம் மனதில் ஏக்கம் தொற்றிக்கொள்ளும். சிலர் காலங்காலமாக நான் நினைத்து வருந்தும் அளவுக்கு காயங்களையும் ஏற்படுத்திச் சென்றுள்ளார்கள். “அற்ப சகவாசம் பிராண சங்கடம்” என்ற வார்த்தையை உயிர்ப்பித்துச் சென்ற உத்தமர்கள் அவர்கள்! “கூடா நட்பு கேடாய் முடியும்” என்று எனக்கு உணர்த்திச் சென்றவர்கள்.

தவளையும் எலியும் நட்புக் கொண்டன, ஒன்றை ஒன்று பிரியாமல் இருக்கத் தங்களை கயிற்றால் பிணைத்துக் கொண்டன, இரண்டும் தண்ணீரில் குதித்தன, தவளை தண்ணீரைக் கண்டதும் அதில் பாய்ந்து நீந்தியது. எலி மூச்சடைத்து செத்து மிதந்தது! அது போன்றே என்னுடைய நிலையும் ஆனதுண்டு. எனக்கு சமமானவர்களோடோ அல்லது அறிவுடையவர்களோடோ எனது நட்பை நான் விசாலப்படுத்திக்கொள்ளவில்லை என்பதை சில நல்ல மனிதர்கள் எனக்கு இடித்துரைத்துள்ளார்கள்.

எமது வாழ்க்கையானது நட்பால் அரண் செய்யப்பட வேண்டியதுதான். காரணம் நண்பர்கள் இல்லாதோர், வாழ்க்கையில் பல இன்பங்களை இழக்கின்றனர், துன்பங்களைத் தனியாகச் சுமக்கின்றனர். நண்பர்கள் இன்ப துன்பங்களின் சம பங்காளிகள், இருந்தாலும் அந்த நண்பர்களை நாம் தெரிவு செய்யும் முறையில்தான் ஏதோ தவறு நேர்ந்து விடுகிறது.

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு”

ஆடை இழந்தவனுடைய கைகள் அவன் மானம் காக்க விரைந்து செயற்படுவதைப் போன்றே உண்மை நட்பு யோசிக்காமலும் தாமதியாமலும் உதவ முன்வரும். எமது தவறான செயற்பாடுகளை இடித்துரைத்து இன்னது செய் என கட்டளையிடும். தீய நட்பானது நிழலுக்கு ஒப்பானது. வெளிச்சத்தில் தொடர்ந்து வந்து இருட்டில் மறைந்து போகும்.


ஆல்பர்ட் டூரர், பிரான்ஸ் கிங்டெய்ன் இருவரும் நல்ல நண்பர்கள். இருவரிடமும் ஓவியம் வரையும் திறமையும் ஆவலும் இருந்தது. ஆனால் பயிற்சி பெற பணம் இருக்கவில்லை. இருவரும் இணைந்து ஒரு முடிவிற்கு வந்தார்கள். அது, இருவரில் ஒருவர் முதலில் படிப்பது, மற்றவர் உழைத்து அவரது படிப்பிற்காகும் செலவைக் கவனிப்பது. பின்னர் மற்றவர் உழைத்து முதலாமவரின் படிப்பிற்கு செலவு செய்வது.

அதன்படி டூரர் முதலில் படிக்கச் சென்றார். கிங்ஸ்டெய்ன் உழைத்து அவரைப் படிப்பித்தார். டூரர் பயிற்சி பெற்றுத் தேறியதும் கிங்ஸ்டெய்னை பயிற்சிபெற அனுப்புவதற்கு முன் வந்தார். ஆனால் டூரரின் படிப்பிற்காக கிங்ஸ்டெய்ன் கல்லுடைக்கச் சென்றதால் கைகள் கரடு முரடாக மாறி ஓவியம் வரையும் தன்மையை இழந்திருந்தது. டூரர் தனக்காக தன் ஆசையைத் துறந்துவிட்ட தன் நண்பனின் கைகளை தொழுகை செய்கின்ற கைகளாக வரைந்தார். நட்பின் சிறப்பையும் நன்றி மனப்பான்மையையும் எடுத்துக்கூறும் அந்த ஓவியம் பலரையும் கவர்ந்து பிரசித்தி பெற்றது. நட்பின் இலக்கணத்தை எடுத்துரைத்தது.

நண்பர்கள் தியாகிகளாக இருப்பது நிபந்தனையற்ற அன்பின் வெளிப்பாடு! தியாகிகளாக இருக்காவிடினும் துரோகிகளாக மாறாதிருக்கலாமே?

No comments:

Post a Comment