
எச்.ஐ.வி (Human Immunodeficiency Virus) எனும் வைரசால் தாக்கப்பட்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கும் பரிதாபகரமான நிலைதான் எய்ட்ஸ் எனும் ஏமக்குறைவு நோய். இவ்வைரஸ் மனித உடலின் நோய் எதிர்ப்புக் கலன்களைத் தாக்கி எதிர்ப்பு சக்தியை இல்லாதொழிக்கும். மனிதரின் நோய் எதிர்ப்புத் தன்மையில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்தும். எச்.ஐ.வி தொற்றுடையவரை எய்ட்ஸ் நோயாளி என்று கூறிவிட முடியாது. ஆனாலும் எச்.ஐ.வி தொற்றுடைய அனைவரும் எய்ட்ஸ் நோயாளியாகி இறப்பைச் சந்திக்கும் அவலநிலை ஏற்படுகிறது.
பாதுகாப்பற்ற உடலுறவு, பரிசோதனை செய்யப்படாத இரத்தம், பயன்படுத்திய ஊசிகளைச் சுத்தப்படுத்தாமல் மீண்டும் பயன்படுத்தல் மற்றும் நோய்த்தொற்றுடைய தாயிடமிருந்து கருவிலுள்ள குழந்தைக்குத் தொற்றுதல் எனும் முறைகளில்தான் பெரும்பாலும் இந்நோய் பரவுகின்றது. எச்.ஐ.வி வைரசால் தாக்கப்பட்டவர் 3 ஆண்டுகளிருந்து 10 ஆண்டுகள் வரை இந்நோய்க்கான அறிகுறிகள் தெரியாமலேயே வாழ்வர். எய்ட்ஸ் நோய்க்குரிய அறிகுறிகள் வெளிப்படுகின்ற சந்தர்ப்பத்திலதான்; இவ் ஆட்கொல்லி நோயால் பீடிக்கப்பட்டிருப்பதை உணர முடியும்.
பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாகத்தான் இந்நோய் 80 வீதமான அளவில் பரவி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதுதான் கவலைக்குரிய விடயமாகும். உலகளவில் 33.4 மில்லியின் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் UNAIDS இன் தகவல்கள் தெரிவித்துள்ளன. அத்தகவலின்படி கடந்த 2008ஆம் ஆண்டில் உலகளவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனாகவும் 430,000 சிறுவர்கள் பிறக்கும்போது எச்.ஐ.வி தொற்றுடனேயே பிறந்ததாகவும் ஆசியாக் கண்டத்தில் மாத்திரம் 4.7 மில்லியன் பேர் தொற்றுக்குள்ளாகியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் ஆசியாவில் மாத்திரம் 330,000 பேர்வரை இந்நோய் காரணமாக மரணித்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் 1081 பேர் வரையில் எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 197 பேர் வரை உயரிழந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்நோயாளிகளில் பெரும்பாலானோர் தலைநகரான கொழும்பில் வாழ்பவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் சர்வதேச அளவில் எச்.ஐ.வி தொற்றின் தாக்கம் கடந்த 8 வருடங்களில் 17 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமே.
சமூகப் பழக்கவழக்கங்கள் மூலம் இந்நோய் பரவாது என்பதால் இந்நோயாளியை சமூகத்திலிருந்து விலக்கிவைக்கவேண்டிய தேவை இல்லை. கை குலுக்குதல், தொடுதல், கட்டியணைத்தல், முத்தமிடல், முகாம்களில் ஒன்றாக வாழ்தல், பொதுக்கழிப்பறைகள், நீச்சல்குளம், இருமல், தும்மல், கொசுக்கடி என்பவற்றின் மூலம் இந்நோய் பரவுவதில்லை. இதுவரை இந்நோயைக் குணப்படுத்த மருந்துகள் எவையும் கண்டறியப்படாத காரணத்தால் எம்முடைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இந்நோய்த் தொற்றிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
திருமணத்திற்கு முன்னர் தகாத உடலுறவு கொள்வதைத் தவிர்த்தல், தெரியாத ஒருவருடன் உடலுறவு கொள்ளும்போது ஆணுறையைப் பாவித்தல், விபத்துக்களின் காரணமாக இரத்தம் ஏற்றும்போது அது பாதுகாப்பானதுதானா என்பதை உறுதி செய்தல் ஆகியவற்றின் மூலம் பெருமளவில் இந்நோய்த் தொற்றிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். அத்தோடு ஒரு முறை பயன்படுத்திய ஊசியை மீண்டும் பயன்படுத்துவதானால் அதனை கிருமிநீக்கி (sterilize) பயன்படுத்துவது சிறந்ததொரு வழிமுறையாகும், பயன்படுத்தாமல் இருப்பது அதைவிட சிறந்தது.
இந்நோய் தொற்றுடையவருக்கு ஆரம்பகாலத்தில் எந்தவொரு அறிகுறிகளும் தென்படாது என்பதால் இரத்தப் பரிசோதனைகள் மூலமாக மட்டும்தான் இந்நோய்த்தொற்று குறித்து அறிந்துகொள்ள முடியும்.
எச்.ஐ.வியால் தாக்கப்பட்ட அனைவருக்கும் சாதாரண மனிதரைப் போன்றே சகலவிதமான உரிமைகளும் உண்டு. கௌரவத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டியவர்கள் அவர்கள். அவர்களுக்கு மதிப்பளித்து வாழ்வதுடன் ஒருவனுக்கு ஒருத்தி எனும் எமது பண்பாட்டு நெறிமுறைகளை வாழ்வியல் நெறிமுறைகளாகக் கொண்டு வாழ்ந்து இந்நோயிலிருந்து பாதுகாப்புப் பெறுவோம்!.
துணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்(கு)
இணையாக வேறுமருந் தில்லை - மனைவியெனும்
மானிடத்து மட்டுமே மையல் வளர்த்திந்த
மானுடத்தை வாழ்விப்போம் வா!
- கவிஞர் வைரமுத்து
No comments:
Post a Comment