Thursday, December 3, 2009

உயர்ந்த மனிதர்

புகழ்பெற்ற விஞ்ஞானியான ஐசக் நியூட்டனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் இருபது வருடங்களாகத் தொடர்ந்து உழைத்துத் தனது ஆராய்ச்சி முடிவுகளைக் கண்டறிந்தார். அதைப் பல காகிதங்களில் எழுதி வைத்திருந்தார். ஓரு நாள் ஆராய்ச்சி முடிவுகள் எழுதப்பட்ட காகிதங்களை மேசை மீது வைத்துவிட்டு வெளியில் உலாவச் சென்றார். மேசைமீது மெழுகுவர்த்தி ஒன்று எரிந்துகொண்டிருந்தது. அந்த அறையில் அவரது செல்ல நாயான டைமண்ட் படுத்திருந்தது.
அவர் சென்ற சிறிது நேரத்திற்குப் பிறகு நாய் அங்கும் இங்குமாகத் தாவிக் குதித்து விளையாட ஆரம்பித்தது. குதித்துக் குதித்து மேசை மீது பாய்ந்தது. ஓரு முறை அந்த மெழுகுவர்த்தியின் மீதே குதித்துவிட்டது. மெழுகுவர்த்தி சாய்ந்து அந்தக் காகிதங்களின் மேல் விழுந்தது. என்ன நடக்கும்? ஐசக் நியூட்டனின் இருபது வருட உழைப்பின் பலனான அந்தக் காகிதங்கள் கண நேரத்தில் எரிந்து சாம்பலாயின.
உலவச் சென்றிருந்த அவர் திரும்பி வந்தார். எரிந்துபோன காகிதங்களைக் கண்டு அடைந்த அதிர்ச்சிக்கு அளவேதும் இருக்க முடியுமா? எத்தனை வருட உழைப்பு அன்று வீணாயிற்று. யாராக இருந்தாலும் அந்த இடத்திலேயே அந்த நாயைக் கொன்றிருப்பார்கள். ஆனால் நியூட்டன் அப்படியெல்லாம் ஒன்றும் செய்யவில்லை.
அவர் அதிர்ச்சியடைந்தார். ஆனால் நிலைகுலையவில்லை. பொறுமை அவரை ஆட்கொண்டது. மிகவும் பரிவுடன் அந்த நாயின் தலையை வருடினார். அன்புடன் சொன்னார், 'ஓ டைமண்ட், நீ என்ன காரியம் செய்துவிட்டாய்! இதன் மதிப்பு உனக்குத் தெரியுமா? என்று அமைதியாகக் கேட்டார். மீண்டும் எழுதத் தொடங்கினார். அதை முடிக்க மேலும் பல வருடங்களாயின. அந்த நாயிடம்தான் அவருக்கு எத்தனை கனிவு! வாய்பேசாதா அந்தப் பிராணி செய்த பிழையைப் பொறுத்ததன் மூலம் அவர்தாம் எவ்வளவு உயர்ந்துவிட்டார். அறிவில் மட்டுமல்ல பொறுமையிலும் அவர் உயர்ந்தவரே.
உயர்ந்தவர் குணத்தாலும் மனத்தாலும் பொறுமையாலும் உயர்ந்திருக்க வேண்டுமேயல்லாது, பணத்தாலன்று என்பதை நான் கற்றுக்கொண்டதும்கூட இந்தக் கதையைப் படித்ததன் பின்னர்தான்.

No comments:

Post a Comment