Sunday, December 6, 2009

எயிட்சை நிறுத்து, சத்தியத்தைக் காப்பாற்று

எயிட்ஸ் தினமானது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதலாம் திகதி சர்வதேச அளவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாண்டு 'எயிட்சை நிறுத்து, சத்தியத்தைக் காப்பாற்று” எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு இலங்கையில் இந்நோயின் தாக்கம் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளும் நோக்கில் எயிட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டு நிகழ்ச்சிப் பிரிவின் (UNAIDS) இலங்கை மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர் டேவிட் பிரிட்ஜர் அவர்களை நேர்கண்டோம்;.

உலகளவில் எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33.4 மில்லியனாக இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அவ்வாறாயின் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வாறுள்ளது?
அதிகளவிலானோர் இந்நோய்த்தொற்றுடன் வாழ்கின்றபோதிலும் புதிதாக இந்நோய் தொற்றுவது குறைவடைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. உலகளவில் அதிகரித்துக் காணப்பட்டாலும் குறிப்பிட்ட சில நாடுகளில் இந்நோய்த்தாக்கம் குறைவடைந்தே காணப்படுகிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் தற்போதும் மிகக் குறைந்தளவிலேயே இருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.

எச்.ஐ.வி தொற்றுடையோர் குறித்த கடந்த ஆண்டிற்கான தரவுகள் உங்களிடம் இருக்கின்றதா?
அரசு, எச்.ஐ.வி / எயிட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டு நிகழ்ச்சிப் பிரிவு மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் கணக்கெடுப்பின்படி 3800 பேர் வரையில் எச்.ஐ.வி தொற்றுடன் வாழ்கின்றனர். இலங்கையின் அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகக் குறைவாக அதாவது 0.1 சதவீதமாகவே இருக்கின்றது. இது உண்மையில் மிகவும் நல்லதொரு விடயம்.

இலங்கையில் எச்.ஐ.வியின் பாதிப்பு அதிகமாக உள்ள பிரதேசங்கள் எவை?
இதுதொடர்பில் இலங்கை பற்றிய போதுமான தகவல்கள் எம்மிடம் இல்லை. அண்ணளவாக 3800 முதல் 4000 பேர் வரையில் எச்.ஐ.வி தொற்றுடன் வாழ்கின்றார்கள் என நினைக்கின்றோம். இதில் 1100 முதல் 1200 வரையிலான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டோர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பகுதியினர் தொற்றுடன் இருந்தபோதும் தம்மை பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை என நாம் நினைக்கின்றோம்.

எச்.ஐ.வி எவ்வாறு தொற்றுகின்றது என்பது பற்றித் தெரிவிக்க முடியுமா?
எச்.ஐ.வி தொற்றுடையவருடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதாலோ அல்லது அவர் பயன்படுத்திய ஊசியினைப் பயன்படுத்தினாலோ இந்நோய்த்தொற்று ஏற்படும். அத்துடன் மிகக் குறைந்தளவில் இரத்த மாற்றம் முறையிலும் இத்தொற்று ஏற்படுகின்றது.

அதிகளவில் இந்நோய்த் தொற்றுக்கு உள்ளாகுபவர்கள் யார்?
யார் இந்நோய்த் தொற்றுக்கு அதிகளவில் உள்ளாகின்றனர் என்பது பற்றி தற்போதும் நாம் ஆராய்ந்து வருகின்றோம். இதில் அதிகளவில் பாதிக்கப்படுவோர் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வோரும் பாலியல் தொழில் புரிவோரும், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களும் போதை ஊசிகளைப் பயன்படுத்துவோருமே. ஆனால் இத்தகையோர் தனிமைப்படுத்தப்படவில்லை. உதாரணமாக போதை ஊசியினைப் பயன்படுத்தும் எச்.ஐ.வி தொற்றுடைய நபருக்கு காதலியோ அல்லது மனைவியோ இருந்து அவர்களுக்கும் எச்.ஐ.வி தொற்று ஏற்படலாம்.

இந்நோய்க்கு எவ்வகையான மருத்துவ வசதிகள் இலங்கையில் காணப்படுகின்றன?
மருத்துவப் பாpசோதனைக்கு உட்படும் தொற்றுடைய நபர்களுக்கு 2005ஆம் ஆண்டிலிருந்து இலங்கை antiretroviral (ART) எனப்படும் மருந்தை இலவசமாக வழங்கி வருகின்றது. இலங்கை அரசாங்கம் இந்த மருத்துவ சிகிச்சையினை எயிட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவிற்கான சர்வதேச நிதியத்தின் உதவியுடன் வழங்கி வருகின்றது.

எயிட்ஸ் நோயின் அறிகுறிகள் எவை?
உங்களுக்கு இந்நோய் குறித்து சந்தேகம் ஏற்படுமிடத்து கண்டிப்பாக இரத்தப் பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். காரணம் இந்நோய் தெளிவானதொரு அறிகுறியினை வெளிப்படுத்துவதில்லை. எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டு நீண்ட காலத்தின் பின்னர் கூட அதற்கான அறிகுறிகள் தென்படலாம். அதனால் நீங்கள் பாதுகாப்பற்ற முறையில் ஊசியினைப் பயன்படுத்தியிருந்தாலோ அல்லது பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டிருந்தாலோ கண்டிப்பாக மருத்துவ பாpசோதனைக்கு உங்களை உட்படுத்த வேண்டும்.

இலங்கையில் எங்கு எச்.ஐ.விக்கான பரிசோதனை நிலையங்கள் அமைந்துள்ளன?
கொழும்பில் மட்டுமல்ல நாட்டின் பல பகுதிகளிலும் பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 26 நிலையங்களில் எச்.ஐ.விக்கான பரிசோதனைகளும் ஆலோசனைகளும் வேறு சில சேவைகளும் வழங்கப்படுகின்றன. இந்த பரிசோதனை நிலையங்கள் குறித்த தகவல்களை மக்கள் தேசிய எயிட்ஸ் திட்டம் (National AIDS program) எனும் இணையத்தளத்தின் மூலம் தொpந்துகொள்ள முடியும்.

சமூகம் தன்னைத் தவறான கண்ணோட்டத்துடன் நோக்கும் என்ற அச்சநிலை எயிட்ஸ் நோய் பற்றி வெளியில் தெரிவிப்பதற்குத் தடையாக இருக்கின்றது. இதுபற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?
இந்த சமூகம் குறித்த அச்சம் காரணமாகத்தான் எச்.ஐ.வி தொற்றுடையவர்கள்கூட தம்மை பரிசோதனைக்கு உட்படுத்தவோ சிகிச்சையினைப் பெறவோ முன்வருவதில்லை. இவ்வாறு பயப்படத்தேவையில்லை, காரணம் தற்போது எயிட்ஸ் நோய் சிகிச்சையளிக்கக்கூடியதொன்றாக மாற்றங்கண்டு வருகிறது. இலங்கையில் இந்நோய்க்கு இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

எச்.ஐ.வி குறித்த தவறான புரிந்துணர்வுகள் எவை?
எச்.ஐ.வி நோய் தொடுவதாலோ, ஒன்றாக வாழ்வதாலோ, சேர்ந்து பணியாற்றுவதாலோ பரவும் என்பது மக்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படும் தவறான புரிந்துணர்வாகும். இவ்வாறு நடப்பதற்கு சாத்தியமில்லை. இதனால் எமது அன்றாட வாழ்வில் எவ்வித ஆபத்தும் ஏற்படப்போவதில்லை.

எச்.ஐ.வி சவரக் கத்திகளால் (Shaving Blade) பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டா?
இல்லை, வேறு சில பாலியல் தொற்றுநோய்கள் சவரக்கத்திகளால் பரவக்கூடியதாக இருக்கலாம், ஆனால் கண்டிப்பாக எச்.ஐ.வி அவ்வாறு பரவுவதில்லை.

No comments:

Post a Comment