
போனது நேற்றின் முன்னம்
இன்று நான் எதனைப்
பாடக் கூடும்?
இது ஒரு கவிஞனின் புலம்பல், பூக்களைக் காணாக் கவிஞனுக்கு இத்தகைய சோகம் நியாயமானதுதானே! நம்மை வாழவைக்கின்ற இயற்கை சிதைந்து வருகின்றது, நமக்கோ நமது ஆடம்பர வாழ்க்கைக்குள்தான் அக்கறை நிற்கிறது.
வானகமே...இளவெயிலே...மரச்செறிவே....
என்று பாடினார் பாரதி. இயற்கையின் எழிலைக் கண்ணுறாத காரணத்தினாலோ என்னவோ இன்றைய நகரத்துக் கவிஞர்களுக்கு எதைப் பாடுவதென்று தொpயவில்லை போலும்! இருபத்தொராம் நூற்றாண்டு எத்தகைய வழித்தடங்களை விட்டுச் செல்கின்றது பார்த்தீர்களா? இயற்கை அழிவுகள் மட்டும்தானே இமயமாய் நிற்கின்றது!
மனிதன் நிர்வாணமாய் இருந்தான்
இயற்கை மானமுடன் இருந்தது!
மனிதன் நாகரிகம் அடைந்தான்
இயற்கை நிர்வாணம் ஆனது!
– சிவதாசன்
நாகரிக உலகில் ஒரு புறம் குப்பைகள், பொலித்தீன்கள், இரசாயண உரங்கள் என்று நிலம் மாசடைந்து வர மறுபுறம் காடுகள் அழிப்பு, குடிநீர் பற்றாக்குறை நடைபோட, வாகன வரவுகளால் தன் வாழ்நாளைக் குறைத்து விஷமாகிக்கொண்டிருக்கும் காற்றும் ஓசோன் படல ஓட்டையும் பயமுறுத்திக்கொண்டிருக்க, நாமும் நம்முடைய பாதையில் பயணிக்கிறோம், வரவிருக்கும் விளைவுகளை அறியாமல்!

காற்று வெளியினிலே...
வானத்தையே நீ கிழித்துவிட்டாய்
இலை கிழிந்தால் நீ வேறிலை பெறுவாய்
தலை கிழிந்தால் தையல் இடுவாய்
உடை கிழிந்தால் ஒட்டுப் போடுவாய்
ஓசோன் கிழிந்ததே என்ன செய்குவாய்?
இது கவிஞர் வைரமுத்துவிற்கு வந்த சந்தேகம். ஓட்டுப்போட ஒன்றும் இல்லாததால்தானே திண்டாடுகிறோம்!
மூன்று ஒக்சிஜன் அணுக்களின் தொகுப்பே ஓசோன் மூலக்கூறு(O3). தாவரங்கள் உணவைத் தயாரிக்கும்போது வெளிவரும் ஒக்சிஜன் அணுவோடு வினைபுரிந்து ஓசோன் மூலக்கூறாக மாறுகிறது. பல ஓசோன் வாயுக்கள் இணைந்து ஒரு படலமாக அமைந்துள்ளது. இதுவே ஓசோன் படலம் எனப்படுகிறது. சூரிய ஒளி நம்மை வந்தடையுமுன் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை வடிகட்டும் மகத்தான பணியை ஓசொன் படலம் செய்து வருகிறது. இப்படலத்தில்தான் குளோரோ புளோரோ கார்பனால் ஓட்டை ஏற்பட்டுள்ளது. இந்த ஓட்டையைப் பயன்படுத்தி புறஊதாக் கதிர்கள் நம்மை நேரடியாக வந்தடைகின்றன. இக்கதிர்கள்தான் பல தோல் வியாதி, புற்றுநோய்களை உருவாக்குகிறது.
யோசி மானிடனே!
ஓசோன் படல ஓட்டை தைக்க
ஊசி ஒன்று கண்டுபிடி!
மனிதர்கள் உணவின்றி ஐந்து வாரங்களும், நீரின்றி ஐந்து நாட்களும் வாழ முடியும். ஆனால், காற்றின்றி ஐந்து நிமிடங்கள் மட்டுமே வாழ முடியும். தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளிவரும் கார்பன் துகள்கள்தான் காற்றைப் பெரிதும் மாசுபடுத்துகின்றன. இன்னும் சில நாட்களில் போத்தல் குடிநீர் போல காற்றுப் பைகளும் எம் நகரத்துக் கடைகளில் கிடைக்கும் என நம்புவோமாக!
வீதிகள் விஷம் குடிக்கையில் - நீ
வீட்டிற்குள் பூக்ளை வளர்த்துப்
புண்ணியமில்லை!

நீரின்றி அமையா உலகு!..
காசைத் தண்ணீரைப்போல் செலவளிக்காதே என்பர் அன்று, தண்ணீருக்கும் காசை செலவளிக்க வேண்டியுள்ளது இன்று! வாழும் உயிர்களை வடிவமைத்தது தண்ணீர். பூமியில் 97 சதவீதம் கடல் நீரும் 3 சதவீதம் குடிநீரும் உள்ளது. மூன்றில் ஒரு சதவீதம் நீர் துருவப் பிரதேசங்களில் பனிக்கட்டியாகவும் ஒரு சதவீதம் பூமிக்கடியிலும் உள்ளது. மீதமுள்ள ஒரு சதவீதம் நீரைத்தான் நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக குடிநீரும் கழிவு நீராகி மரங்களின் மடிவில் நீரின் சுழற்சியும் நின்றுபோயுள்ளது.
அகன்ற ஆறு
அக்கரைக்குப் போக
ஓடத்திற்கு பதில் செருப்பு!
இது கவிஞர் அறிவுமதியின் அற்புதப் படைப்பு. நீர் வறண்ட ஆற்றின் அவல நிலையின் படப்பிடிப்பு!

இயற்கையின் இதயம்
மரங்களையும் காடுகளையும் இயற்கையின் இதயமென்றால் அதில் தவறில்லை. தன்னையே முழுமையாகக் கொடுக்கும் இயற்கையின் காதலி காடுகள் தான். சுற்றுப்புறக் காற்றை சுத்திகரிக்கும் சுந்தரிகள், மண்ணரிப்பு நோயை குணப்படுத்தும் மருத்துவர்கள், மேகத்தை நிறுத்தி மழையை வசூலிக்கும் அதிகாரிகள், ஓசொன் படலத்திற்கு வலு சேர்க்கும் வைட்டமின்கள் காடுகள். காடுகளைக் காப்பதால் மட்டுமே எம் நாடு இயற்கை சீற்றங்களான சூறாவளி, சுனாமி போன்றவற்றிலிருந்து காக்கப்படும்.
மரம் வெட்டி சீரழிக்கும்
கோணல் புத்தி மனிதனுக்கு
தலைவெட்டி தண்டணை
தந்தால்தான் வளர்ப்பானா?
No comments:
Post a Comment