Wednesday, June 1, 2011

எல்லைகளைத் தாண்டி…

இனம், நிறம், மதங்களைக் கடந்தது காதல் என சரியாக சொல்லிச் சென்றுள்ளார்கள். வயது எல்லைகளற்றது காதல் என்பதையும் இதில் இணைத்திருக்க வேண்டும் என சொல்லத் தோன்றுகிறது.

வயது கூடிய பெண் தன்னை விட வயது குறைந்த நபர் ஒருவரை மணம் முடிப்பதை ஆங்கிலத்தில் cougar என்கின்றனர். இந்த cougar ஜோடிகளை இன்று எம் சமூகத்தில் இனங்காண்பது மிக சாதாரணமாகிவிட்டது. இவ்வாறான திருமண பந்தங்கள் கலாசார சீரழிவுகளைக் காட்டுகிறது என ஒரு சாரார் சாடினாலும் காதல் இந்த எல்லைகளையெல்லாம் கடந்தது என மறுசாரார் வாதிடுகின்றனர்.

இந்த வாதப் பிரதிவாதங்களையெல்லாம் மீறி திருமணம் முடித்துக்கொண்டு பல பிரபலங்கள் இன்று மகிழ்ச்சியாகத் தான் இருக்கின்றனர். விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மாத்திரமே விவாகரத்துப் பெற்றுக்கொண்டு விலகியுள்ளார்கள்.

2009ஆம் ஆண்டில் வெளியான “Wake up sid” என்ற திரைப்படத்தின் மையக் கருத்து இந்த cougar காதல் தான். ரன்பிர் கபூர் தன்னை விட வயது முதிர்ந்த கொன்கோனா சென் ஷர்மாவைக் காதலிப்பதைக் காண்பதற்கு திரையரங்கு முழுதும் ரசிகர் கூட்டம் திரண்டிருந்தது.

அவ்வளவு பெரிய வயது வித்தியாசம் இல்லாவிட்டாலும் 1 வயது வித்தியாசத்திற்காகத் தன்னை மறுத்த த்ரிஷாவைக் காதலித்த சிம்புவின் காதல் வெற்றி பெறாவிட்டாலும் விண்ணைத் தாண்டி வருவாயா படம் அமோக வெற்றிபெற்றது.

ஹோலிவுட் பிரபலங்கள் பலவும் இவ்வாறான திருமண பந்தங்களில் இணைந்துள்ளார்கள் என்பது எம்மில் பலரும் அறிந்த விடயம் தான். அண்மையில் அவ்வாறு இணைந்த ஜோடி தான் டெமி மூர் மற்றும் அஷ்டன் குட்ச்சர் (15 வயது வித்தியாசம்).

சுசான் சரன்டன் மற்றும் டிம் ரொபின்ஸ் (12 வயது வித்தியாசம்)
மரியா கெரி மற்றும் நிக் கென்னோன் (10 வயது வித்தியாசம்)
மெடோனா மற்றும் ரிச்சி (10 வயது வித்தியாசம்)

இப்படி பட்டியல் நீள்கிறது. இந்நிலையில் இந்தியாவின் சில பிரபலங்களும் கூட தன்னை விட வயது முதிர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்கள். உதாரணமாக

சயிப் அலிகான் - அம்ரிதா சிங் (12 வயது வித்தியாசம் - பிரிந்துவிட்டார்கள்)
சச்சின் டென்டுல்கர் - அஞ்சலி டென்டுல்கர் (5 வயது வித்தியாசம்)
ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் (2 வயது வித்தியாசம்)
ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா (2 வயது வித்தியாசம்)
நர்கிஸ் - சுனில் தத் (1 வருட வித்தியாசம்)

இந்தப் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டிய பிரபலங்கள் அல்லாதவர்கள் பலர் நம் நாட்டில் இருந்தாலும் தம்மை வெளிக்காட்டிக் கொள்வதில் வெட்கப்படுகின்றார்கள் என்ற நிலைதான் நிலவுகிறது. இவ்வாறான திருமண பந்தங்கள் ஒரு புறம் பெண்களின் சுதந்திரப் போக்கையே பிரதிபலிக்கிறது. பாரதியின் கனவை மிஞ்சிய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது போலும்.

இந்தத் திருமணங்களை எம்மில் எத்தனை பேர் ஆதரிக்கின்றீர்கள், எத்தனை பேர் மறுக்கின்றீர்கள் என்பதற்கான புள்ளிவிபரப் பட்டியல் என்னிடம் இல்லை. ஆனால், மருத்துவ ரீதியாக எந்தப் பிரச்சினைகளும் இல்லாவிட்டாலும் மன ரீதியான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கவே செய்கின்றன. இருந்தாலும் ஒரு அன்பான, புரிந்துணர்வு மிக்க காதல் இந்தத் தடைகளையெல்லாம் தாண்டும் என்ற நம்பிக்கை எனக்குண்டு!

No comments:

Post a Comment