
பிறந்த பொழுதிருந்தே
திறந்த மேனியாய் இருக்கும்
இந்தப் பிரபஞ்சம்
எதைச் சொல்ல எத்தனிக்கிறது?
ஏதுமற்ற ஏதிலியாய்
என்றோ ஓர் நாள் சூனியப் பிரதேசத்தில்
ஓசையின்றி ஓய்ந்துபோகும்
உயிர்கள் என்றா?
பிரசவித்தவை எல்லாம்
பிணங்களாய்ப் போனபின்னும்
சாவுச் சங்கிலி மட்டும்
சரித்திரமாய்த் தொடர்வதேனோ?
பாதைகளை விழுங்கி
பயணங்களைப் பறித்துக்கொண்டு
நிர்க்கதியாய் விடப்பட்டாலும்
உடைந்த சிறகுகள் படபடக்கிறது…
மாற்றங்காண மனது
மடியும் வரை துடிக்கிறது
முடியும் வரை முயன்றும்
பயனின்றிச் சரிகிறது…
சுவாசத்தைத் துறந்து
சாயும் பொழுது தான்
சங்கதி புரிகிறது
சகலமும் சூனியமென!!!
No comments:
Post a Comment