
முருகன் சாந்தன் அறிவு மூவரையும் தூக்கிலேற்ற வேண்டும் என தொண்டை கிழியக் கத்தும் காங்கிரஸைச் சேர்ந்த தங்கபாலுவிற்கு சோனியா காந்தியின் விதவைக் கோலமும் ராகுல் மற்றும் பிரியங்காவின் துயரமும் மட்டும் தானா கண்ணுக்குத் தெரிகிறது? ஈழத்தில் அமைதிப்படை என்ற போரில் அராஜகங்கள் இடம்பெற்ற போது இந்த மனுசன் எந்த தேசத்தில் இருந்தாராம்? (ஐயா தங்கபாலு ஏதோ தங்க பால் (பந்து) ஒன்னு தரையில அடிபட்டு அங்க இங்க ஆடுற மாதிரி உன் பொழப்பும் ஆடப்போகுது பார்த்துக்கொள்ளும்!)
பேட்டரி வாங்கிக்கொடுத்தார்கள் என்ற குற்றம் கூட ஒழுங்காக நிரூபிக்கப்படாத நிலையில் 20 ஆண்டுகால சிறைத்தண்டனை என்பது அநீதியான செயல். அந்த பேட்டரிகள் தான் கொலைக்குப் பயன்படுத்தப்பட்டது என்பதை எவரும் இதுவரை நிரூபிக்கவில்லை. ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனைகளை எதிர்கொண்டுள்ளார்கள் இந்த நிரபராதிகள் மூவரும். ஒரு ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள் தான். ஆனால் இவர்கள் 20 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் தூக்குத் தண்டனையையும் எதிர்கொண்டிருப்பது இந்தியச்சட்டத்தில் எந்தப் பக்கத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்தவர்கள் தயவுசெய்து எனக்குச் சொல்லுங்கள்.
அம்மா நினைத்தால் முடியும் என்றார்கள். ஈழத்தாய் என திடீரென அவதாரம் எடுத்த அம்மா தற்போது தன்னால் எதுவும் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டார். நைஸாக நழுவிக்கொள்ளும் வித்தையெல்லாம் இவர்கள் அரசியலுக்கு வருமுன்னே கற்றுக்கொண்டு விட்டார்கள். இவர்களை நம்பிப் புண்ணியமில்லை.
ராஜிவ் கொலை பற்றி நியாய அநியாயங்கள் பலருக்கும் தெரிந்த விடயமே. ஈழத்திற்கு இந்தியா இழைத்த அநியாயங்களுக்கு அடையாளங்களாகவே இந்த மூவரையும் என்னால் காண முடிகிறது. இவர்களுக்கு தூக்குத்தண்டனை விதித்திருப்பதன் மூலம் இந்திய நீதிச்சட்டத்தை இவர்கள் தூக்கு மேடையில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை!
No comments:
Post a Comment