Monday, June 8, 2009

நிராகரிப்பு

மனதில் ஏதோ கவலை தொற்றிக்கொள்ள கடற்கரை நோக்கி தனியாகச் சென்றேன். அங்குள்ள மனிதர்களை உற்று நோக்கினேன். காலார நடை பயிலும் சிலருக்கு மத்தியில் காதலர்களும் கண்களுக்கு தென்பட்டனர். அது வழக்கமாக அங்கே நடப்பது தானே என்று கண்களைச் சற்று சிறுவர்கள் கட்டி விளையாடிக் கொண்டிருந்த மணல் வீட்டில் பதித்தேன்.
 
ஆரவாரத்துடனும் உற்சாகத்துடனும் மூன்று பேர் சேர்ந்து அந்த மணல் வீட்டைக் கட்டிக்கொண்டிருந்தனர்.

ம்…. இதுவும் கடற்கரையின் அன்றாடக் காட்சி தானே என்று மனம் எங்கோ மாற எத்தனிக்கையில் சட்டென்று வந்த அலை அந்த மணல் வீட்டை சாய்த்துச் சென்றது…. ஐயோ போச்சே… என்ற சிறுமி ஒருத்தியின் குரல் காதில் விழும்போதே மணல் வீடு மனதில் ஏதோ மாற்றத்தை உண்டு பண்ணியதாய் உணர்ந்தேன்.

அந்த சிறுவர்கள் மணல் வீடு கட்டியது போலவே நாம் மனக்கோட்டை கட்டுகிறோம். அது நடக்கும் என்றோ… இது நிலைக்கும் என்றோ… எண்ணிக்கொள்கிறோம். காலமா? காலனா? கடவுளா? கடலை எப்படி உவமைப்படுத்துவதென்று தெரியவில்லை. காற்றடித்த வேகத்தில் கடல் அலை வந்து மணல் வீட்டை அடித்து செல்வது போலவே சில நேரங்களில் எமது மனக்கோட்டையும் மண்ணோடு மண்ணாகிவிடுகிறது.

எத்தனை ஆசைகள் நிராசைகளாகின்றன? எத்தனை கனவுகள் கலைந்து போகின்றன? கடிகார முட்களுக்குள் காலம் ஓடிக்கொண்டிருக்க அதற்குள் எம் கால்களும் எதையோ தேடி ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.

 நிறைவேறியவற்றை வெற்றிகளாகவும் நிராகரிக்கப்பட்டவற்றை தோல்விகளாகவும் கருதிக்கொள்கிறோம்.

நிராகரிப்பு என்றவுடன் எனக்கு உலகப் புகழ்பெற்ற மோனாலிஷா ஓவியம் நினைவுக்கு வருகின்றது. லியானார்டோ டாவின்சி வரைந்த அமைதி ததும்பும் ஓவியம் மோகனப் புன்னகை பார்ப்போரைக் கவரும் ஆனால் அந்த ஓவியம் கூட நிராகரிப்பின் சின்னம்தான் என்று எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

டாவின்சிடம் வந்து தன் மனைவியின் ஓவியத்தை வரைந்து தருமாறு வேண்டிக்கொண்டாராம் ஒருவர். அதன்படி டாவின்சி வரைந்த ஓவியத்தை அந்த நபர் அது தன் மனைவிபோன்று இல்லை என்று வாங்க மறுத்துவிட்டாராம். அப்படியே கிடந்த அந்த ஓவியத்தை பல வருடங்களின் பின்னர் பிரெஞ்சு நாட்டு மன்னர் ஒருவர் பணம் கொடுத்து வாங்கியதாகவும் அதன் பின்னரே அந்த ஓவியம் பலரது மனதையும் கவர்ந்து பிரபல்யமடைந்ததாகவும் என்றோ எங்கோ ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம்.

அன்று ஒருவரால் நிராகரிக்கப்பட்ட ஓவியம் இன்று பலராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லையா? நிராசைகள் நிதர்சனமாகும் வரையும் நிராகரிப்புகள் அங்கீகரிக்கப்படும் வரையும் காத்திருப்போம்… காலச் சக்கரத்தில் கால்கள் சுழன்றபடியே….

No comments:

Post a Comment